Monday, March 24, 2014

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து வருபவர் அயன் என்ற பிரம்மன்.

அவ்வாறு படைக்கப்பட்ட மாந்தர்களை காத்து வருபவர் மால் என்ற மஹாவிஷ்ணு.

மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன்.

இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!


நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான்;அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி;ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,வழிபட்டு வந்துள்ளனர்;இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும்,வலிமையோடும்,சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;



இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது;ஆண்கள் எனில்,மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது;எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ,அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்;


எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்;கடன்கள் தீரும்;அரசு வேலை கிடைக்கும்;நிறுவனம் வளர்ச்சியடையும்;வராக்கடன் வசூலாகும்;ஆரோக்கியம் மேம்படும்;தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள்;கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்;பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்;அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது;குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும்;சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும்;கடந்த மூன்று வருடங்களில் இந்த வழிபாட்டை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகின்றனர்;அவ்வாறு தொடர்ந்து வீட்டில் வழிபட்டதால்,ஒவ்வொருவருக்குமே மேற்கூறிய பலன்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன;கிடைத்து வருகின்றன;

18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம்;தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத அபரிதமான பலன்கள் கிட்டும்;சாதி,சமய வேறுபாடுகள் இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் இந்த வழிபாட்டைப் பின்பற்றலாம்;


கையால் செய்யப்பட்ட வெல்லக்கட்டிகள் குறைந்தது இரண்டு;
மஞ்சள் துண்டு,(வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுத்துண்டு),மண் அகல்விளக்கு ஒன்று,சுத்தமான பசுநெய் குறைந்தது 250 மிலி,சந்தன வாசம் தரும் பத்தி பாக்கெட் பெரியது இரண்டு,அரைக்கப்பட்ட சந்தனம் குறைந்தது ரூ.10/-க்கு,எவர்சில்வர் கிண்ணம் ஒன்று,காகிதத்தில் செய்யப்பட்ட தட்டுக்கள் 100(கிராமப்பகுதியில் வசிப்பவர்கள்/வீட்டிற்குள்ளேயே வாழைத்தோட்டம் வைத்திருப்போர் வாழை இலையை தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.(இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குத் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம்)



தினமும் காலை 4.30 மணி முதல் காலை 8 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.வீட்டின் பூஜையறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்;அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி( ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;ஒருபோதும் வேறு எந்த காரியத்திற்கும் இதைப்பயன்படுத்தக்கூடாது) அமர்ந்து கொள்ள வேண்டும்;செவ்வரளி மாலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்;(தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது).கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும்;சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்;பிறகு அவரது பாதத்திலும்,பிறகு ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,சூலாயுதம்,அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கக் கூடாது;பிறகு,சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும்;பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுப் பாடக்கூடாது)


இவ்வாறு பாடுவதற்கு முன்பே,வீட்டில் சமையல் முடிந்திருந்தால்,நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும்;அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும்;இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பல வீடுகளில் மேலே கூறியபடி வழிபாடு செய்யும் போது சமைத்திருக்க மாட்டார்கள்;எனவே,இந்த வழிபாடு முடித்துவிட்டு,எப்போது சமையல் நிறைவடைகிறதோ அப்போது மேலே கூறியவிதமாக படையலை வைக்க வேண்டும்.


இரவில் தூங்குவதற்கு முன்பு(வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு)  படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி,வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.பல நாட்கள்/வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள்;அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்துவிடுகிறது.


இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில்(ஜனனம்,ருது,சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டுமுறைக்கு விடுமுறை விடுவது அவசியம்;
பல குடும்பங்களுக்கு ஒரே ஒரு அறைதான் வீடாகவே இருக்கிறது;அவர்கள் அந்த ஒரே ஒரு அறையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;பெரும்பாலும் இல்லத்தரசிகளே செய்வது நன்று;அவ்வாறு இல்லத்தரசிகள் வழிபாடு செய்து வரும் நாட்களில்,உடன் தமது மகளுக்குப் பயிற்றுவிப்பது நன்று;ஏனெனில்,மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு(மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம்;


இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது,ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும்,நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்;அல்லது நமது நியாயமான நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறத் துவங்கும்;குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சம் நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்;அவ்வாறு வரும் சம்பத்துக்கள் மூன்று தலைமுறை வரை நிலைத்து நிற்கும்;


தொலைதூர மாநிலங்கள்,அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மேலே கூறிய பொருட்களில் ஏதாவது ஒருசில பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவர்;அவர்கள் நெய்தீபம் ஏற்றிவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றி/சொர்ணபைரவ அஷ்டகம் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் பாடிவருவது போதுமானது.


ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும்;காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது;இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது.கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர்;வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!! 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


பைரவ விழாக்களில் முக்கியமானது சம்பா சஷ்டி!





தற்காலத்தில் தொலைக்காட்சி,ஆன்மீகச் சொற்பொழிவுகளில் சிவனுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்;விநாயகர்,முருகர்,ஐயப்பன்,வீரபத்திரர்,பைரவர் =இவர்கள் அனைவருமே சிவனின் குழந்தைகள் என்று திரித்துச் சொல்கிறார்கள்;இதைவிட முட்டாள்த்தனம் வேறு இல்லை;

சிவனின் குழந்தைகள் விநாயகரும்,முருகக் கடவுளுமே! சிவனின் அவதாரமாக இருப்பவர்கள் பைரவப் பெருமானும்,வீரபத்திரரும்.

முன்னொரு காலத்தில் மணி,மல்லன் என்ற இரு அசுரர்கள் மக்களுக்கும்,முனிவர்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தனர்;முனிவர்கள் படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் முறையிட்டனர்;அவரோ திருமாலிடம் முறையிட்டார்;இருவரும் சதாசிவனிடம் சென்று முறையிட்டனர்;சதாசிவன் தனது அம்சமான மார்த்தாண்ட பைரவரை ஏவினார்;மார்த்தாண்ட பைரவர் குதிரை மீது ஏறி போருக்குக் கிளம்பினார்;குதிரை  மீது அமர்ந்தவாறே சூலாயுதத்தால் மணி,மல்லன் இருவரையும் கொன்றொழித்தார்;இந்த வரலாறு பிரம்மாண்டபுராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.மார்கழி மாதம் சுக்லபட்சம் “ஐந்து நாள் நவராத்திரி விழா” சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இதனையே சம்பா சஷ்டி என்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் மல்லாரி என்ற இடத்தில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Sunday, March 16, 2014

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று வரங்கள்!!!





அந்தத் தம்பதி திருமணமான இரவே எதிர்காலத்தில் எப்படி யாரையும் சாராமல் வாழ்வது? என்ற நோக்குடன் இரண்டு மணி நேரம் வரை கலந்துரையாடினர்;முடிவில் இருவருமே தேர்வு எழுதி அரசு வேலையில் சேர்வது என்ற முடிவுக்கு வந்தனர்;திருமணமாகி நான்கு ஆண்டுகள் நகர்ந்தன;இருவருமே விடாப்பிடியாக தொடர்ந்து அரசுத் தேர்வுகள்,வங்கித் தேர்வுகள்,மத்திய அரசுத் தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளை எழுதிக் கொண்டே வந்தனர்;இருவருமே தனியார்வேலை பார்த்து கொண்டே இப்படி அரசுப்பணியில் சேர முயற்சித்துக் கொண்டே இருந்தனர்;

நான்காம் ஆண்டில் அவர்கள் நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்தனர்;சந்திப்பின் முடிவில்,அவர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறையை வீட்டில் செய்யத் துவங்கினர்;அதற்கு பைரவ மஹாசாஸ்த கல்ப வழிபாடு பாகம் 1 புத்தகம் கையேடாக இருந்தது; மிக எளிமையான அந்த வழிபாட்டுமுறையை ஒருநாள் கூடவிடாமல் பின்பற்றி வந்தனர்;

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் படத்தை நம்மிடமிருந்து வாங்கி,பிரேம் போட்டு,வீட்டில் வடக்கு நோக்கி வைத்தனர்;தினமும் அதிகாலையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரைப் போற்றும் சொர்ணபைரவ அஷ்டகத்தை 27 முறை பாடினர்;காலை 4.30 முதல் 5 மணிக்குள் காலைக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு,கிழக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து,சொர்ணாகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஒரு நெய்தீபத்தை ஏற்றி வைத்தனர்;
முதலில் ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஓம் (அவர்களின் குல தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு,
சொர்ணபைரவ அஷ்டகத்தை 27 முறை மனதிற்குள் பாடினர்;இப்படி 27 முறை பாடிட,90 நிமிடங்கள் ஆயின;கணவன்,மனைவி இருவருமே இணைந்து இந்த வழிபாட்டுமுறையை தினமும் பின்பற்றி வந்தனர்;மனைவியானவர் ஒரு மாதத்தில் 27 நாட்கள் வரை வழிபட்டு வந்தார்;வழிபாட்டின் முடிவில் சமையல் செய்துவிட்டு,ஒரு கிண்ணத்தில் சமைத்த உணவை வைத்துக் கொண்டு,அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்த்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக வைத்துவிட்டு,இருவரும் சாப்பிடும் பழக்கத்தைத் துவக்கினர்;பிறகு,அவரவர் வேலைகளுக்குப்புறப்பட்டனர்;இரவு வீடு திரும்பியதும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த அந்தப் படையலை எடுத்து,இன்னொரு தட்டில் வைத்து வீட்டின் வெளியே இருக்கும் ஒரு (கவிழ்க்கப்பட்ட) உரல் மீது வைத்தனர்;மறுநாள்,அந்த தட்டைக் கழுவி சுத்தப்படுத்தி,அன்று இரவுக்குப் பயன்படுத்தும் விதமாக வைத்துக் கொண்டனர்;

இப்படியே ஒரு வருடம் ஆனதும்,கணவருக்கு வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் நேர்காணல் வந்தது;அதில் தேர்வானார்;முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தை விடவும்  அதிக சம்பளத்தில் இங்கே வேலை கிடைத்தது;ரூ.5000/-சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு, இங்கே ரூ.8000/-ஆரம்பச் சம்பளமாக உயர்ந்தது.இரண்டு ஆண்டுகள் வரை விடாப்பிடியாக தொடர்ந்து சொர்ண பைரவ வழிபாட்டைப் பின்பற்றிவந்தனர்;மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்;இப்போது இவரது சம்பளம் ரூ.12,000/-ஆக உயர்ந்தது;மூன்றாம் ஆண்டின் முடிவில்,அதாவது சரியாகச் சொல்வதாக இருந்தால்,இரண்டு ஆண்டு ஒன்பது மாதங்கள் ஆன நிலையில்,இவர் அரசு போட்டித் தேர்வின் மூலமாக அரசு ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;அதற்கு அடுத்த இரண்டாம் மாதத்தில்,(இரண்டு ஆண்டு,பதினோராம் மாதத்தில்) இவரது மனைவியும் அரசு வேலையில் சேர்ந்தார்;பணியில் சேர்வதற்கான ஆணைகள் கிடைத்ததும்,தம்பதியராக ஐயா சகஸ்ரவடுகர் அவர்களிடம் நேரில் வந்து ஆசி பெற்றனர்.தொடர்ந்து ஒரு நாள் கூட விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வோம் என்று உறுதி கூறிவிட்டு புறப்பட்டனர்;



அந்த குடும்பத்திற்கு ராயல் சுப்பையா குடும்பம் என்ற பட்டம் நான்கு தலைமுறையாக உண்டு;(சுப்பையா என்பது உதாரணத்திற்காக! நிஜப் பெயர் வேறு).பெயரில் ராயல் இருப்பது போல,குடும்பத்திற்கு சகல வளங்களும்,சொத்துக்களும் உண்டு;அந்த தம்பதிக்கு இரு மகன்கள்,ஒரு மகள் இருக்கிறார்கள்.மூன்றாவதாகப் பிறந்த அந்த மகள் பட்டப்படிப்பை முடித்த கையோடு ஆங்கிலத்தில் கதை எழுதும் பழக்கம் உடையவர்;இணையத்தில் எதையாவது தேடிக்கொண்டே இருப்பது அந்த பட்டதாரி எழுத்தாளினியின் வழக்கம்;நமது ஆன்மீகக்கடல் வாசித்ததில் அவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யும் எண்ணம் தானாகவே தோன்றியது;பைரவ மஹாசாஸ்த கல்பவழிபாடு பாகம் 1 ஐ வாங்கினார்;
இவர் வாரம் ஒரு கதையை ஆங்கில மாத இதழ்களுக்கு அனுப்புவது வழக்கம்! இந்தப் பழக்கம் இவருக்கு 11 வகுப்பில் இருந்தே இருந்துள்ளது;ஆறு ஆண்டுகளில் இவர் அனுப்பிய எந்த ஒரு கதையும் தேர்வாகவே இல்லை;நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தால் நமது கதைகள் தேர்வாகி மாத இதழ்களில் வெளிவரும் என்ற நம்பிக்கையில் வழிபாட்டைத் துவங்கினார்.


எந்தக் கோவிலுக்கும் செல்வதையே விரும்பாத தமது மகள் இப்படி திடீரென வழிபாடு செய்யத் துவங்கியது அவளது பெற்றோர்,சகோதரர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது;ஒரு அண்ணன் அடிக்கடி,எழுதி எழுதி போரடிச்சுருச்சா? எப்போ சாமியாரிணி ஆகப் போற? என்று கேலி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.இன்னொரு அண்ணன்,தங்கையின் இந்த போக்கிற்கான காரணத்தை அறிந்து அவன் ஆன்மீகக்கடலை வாசிக்க ஆரம்பித்தான்;ஒரு வருடம் ஆனது.மகளின் வழிபாட்டினால்,குடும்பத்தில் ஒவ்வொருவராக அசைவம் சாப்பிடுவதைக் கைவிடத் துவங்கினர்;ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆனதும்,அந்த எழுத்தாளினிக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில மாத இதழ்களில் இருந்து அவரது கதை தேர்வானதாக தகவல் வந்தது;எழுத்தாளினியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;


இன்னும் உற்சாகத்துடன்,தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வரும் அந்த எழுத்தாளினி,இந்தச் சம்பவத்தை அப்படியே தனது அடுத்த நாவலில் புகுத்த முடிவு செய்திருக்கிறாள்.தற்போது மாதம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வருகின்றனர்;அட்டவீரட்டானங்களுக்கு குடும்பத்தோடு செல்ல முடிவெடுத்துள்ளனர்;


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த மத்திய அரசு நிறுவனத்தில் இவர் தான் பணி மூப்புஅதிகம் உள்ளவர்;இருந்தும் கூட இவரது ஒரே ஒரு பலவீன சுபாவத்தால் இவரது பதவி உயர்வு தள்ளிப் போய்க் கொண்டேஇருந்தது;இடம் பொருள் பார்த்து பேசத் தெரியாததால்,இவரிடம் பேசவே அனைவரும் பயந்தனர்;வேலை சார்ந்த விஷயத்தைத் தவிர,வேறு எதையும் இவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இவர் அந்த மத்திய அரசு நிறுவனத்தில் தீவு போல வாழ்ந்து வந்தார்;


இந்தச் சூழ்நிலையில்,இவரது நண்பர் ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டு முறையை பிரிண்ட் எடுத்து இவரிடம் கொடுத்திருக்கிறார்.வாங்கி தனது பைக்குள் வைத்த இவர் ஒரு மாதமாக அதை வாசிக்கவே இல்லை;பேருந்து பயணத்தின் போது பிக் பாக்கெட் அடிக்க முயன்று பணமே இல்லாததால்,அந்த பையை பேருந்துக்குள்ளாகவே வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டான் அந்த பிக்பாக்கெட் திருடன்.கூட்ட நெரிசல் குறைந்ததுமே தனது தோளில் பையின் கைப்பிடி மட்டும் இருப்பதைக் கண்டு பதறிப்போனார்;தனக்கு எதிராக பேருந்தின் நடக்கும் பகுதியில் தனது பை கிடப்பதைப்பார்த்து,பாய்ந்து போய் எடுத்தார்;உள்ளே எல்லாம் இருக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் போது அந்த பிரிண்ட் அவுட்டை எடுத்து வாசித்திருக்கிறார்.


மறு நாளில் இருந்தே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்கியிருக்கிறார்.எட்டாவது மாதம் நிறைவடைந்து,ஒன்பதாவது மாதம் துவங்கியதுமே இவரது நிறுவனத்தில் பணி புரிந்த ஒவ்வொருவருக்குமே பணிமாறுதல் ஏற்பட்டது;பதிமூன்றாம் மாதத்தில் இவருடன் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வேறு கிளைகளுக்கு பணிமாறுதல் பெற்றுப் போயிருந்தனர்;பத்தாவது மாதத்தில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை ஒரு மனோதத்துவ பயிற்சி கருத்தரங்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.அங்கே கிடைத்த மனோதத்துவ டெக்னிக்குகள் மூலமாக இவர் தனது இயல்பு சுபாவத்தில் இருந்து மாறத் துவங்கியிருக்கிறார்.தான் உண்டு,தனது வேலை உண்டு என்று இருந்ததால் தான் தான் இடம் பொருள் பார்த்துப் பேசத் தெரியாதவர் என்றபெயர் வாங்கியிருப்பதை உணர்ந்து கொண்டார்;15 ஆம் மாதத்தில் தமது துறையின் தலைமைப் பொறுப்பு(செக்ஷன் மேனேஜர்)க்கு இவரை இவரது தலைமை நிறுவனம் தேர்வு செய்தது;சம்பளமும் இரண்டு மடங்கு அதிகரித்தது;இவரது ஆச்சரியத்திற்கு அளவே இல்லை;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு  செய்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று இன்னும் ஆச்சரியப்பட்டு,நமது கழுகுமலை கிரிவலத்திற்கு வருகை தந்தார்;அங்கே இவைகளை நம்மிடம் விவரித்தார்;


நமது நியாயமான கோரிக்கை/ஏக்கங்கள்/நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நிச்சயமாக அடைய முடியும்.(அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;மது முதலான போதைப் பொருட்களையும் நிறுத்த வேண்டும்;பிறகே இந்த வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்).

நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களுடைய ஆசியோடும்,வழிபாட்டின் மூலமாக பலன்கள் பெற்றவர்களின் சம்மதத்தோடும் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Friday, March 7, 2014

இப்பிறவியிலேயே முக்தி கிட்டிட நாம் என்ன செய்ய வேண்டும்?





ஒரு துறவி குளக்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்;அப்போது மீன்கள் நீரின் மேல் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்;திடீரென அந்த இடத்திற்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மீனைக் கவ்விக் கொண்டு செல்வதை பார்த்தார்;அப்போது அவருக்கு ஞானம் பிறந்தது.
அந்த மீனைப் போல பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக இருந்தால் மீனுக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தார்.எனவே, ஆழமான பக்திக்குச் சென்று பைரவப் பெருமானைச் சரணாகதி அடைந்தால் இப்பிறவியிலேயே முக்தி பெற முடியும் என்று நம்பினார்.அந்த நம்பிக்கையை ஒவ்வொரு நிமிடம் தோறும் வளர்த்து எடுத்து,ஒரே பிறவியில் பைரவ தரிசனமும் பெற்றார்;


ஆழமான பக்தியைப் பெற வயிறு நிறையச் சாப்பிடுதல்,தேவையில்லாத பேச்சு பேசுதல்,அடுத்தவரைப்பற்றி புறங்கூறுதல்,வம்பு பேசுதல்,தேவைக்கும் அதிகமாக பணம் சேர்த்தல்,அதை மேலும் மேலும் பெருக்குவதற்காக மட்டுமே சிந்தித்தல்;ஒழுக்கக் கட்டுப்பாடுவிதிகளை அதன் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் போன்ற விஷயங்களைத் தவிர்த்தாலே படிப்படியாக ஆழ்ந்த பக்தி மனதினுள் உருவாகிவிடும்.


வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு; நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீகச் செயல்களும் மரண நேரத்தில் சோதிக்கப்படும்;மரண நேரத்தில் இறைவனை நினைவு கூர்ந்தால் வெற்றி நம் பக்கம்;
எனவே,நாம் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆன்மீகத் தொண்டில் ஆழமாகச் செல்ல பைரவப் பெருமானைத் தஞ்சமடைவோம்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ