Thursday, February 20, 2014

பைரவப் பெருமானின் அருளை உடனடியாகத் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு!!!



கேள்வி:ஐயா வணக்கம்! நான்  உங்கள் ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் வாசித்து வருகிறேன்.வளர்பிறை அஷ்டமி வழிபாடு பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

பதில்: பைரவப் பெருமானின் அருள் கிட்டிட தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வது நன்று.அதுவும்,அந்த நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவரை வழிபாடு செய்தால் நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும்;அப்படி நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீர குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

எமது ஆன்மீக ஆலோசனைப்படி,ஆன்மீகக்கடல் வலைப்பூவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேய்பிறை அஷ்டமியைப் பற்றி தொடர்ந்து பிரபலப்படுத்தியும் வருகிறோம். அதன்படி,தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தொடர்ந்து 12 தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் அவரவர் ஊர்களுக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ சன்னதிகளுக்குச் சென்று வழிபாடு செய்து தமது கடன் பிரச்னை,வராக்கடன்கள் வசூலாகுதல்,கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுத்தல் போன்றவை தீர்ந்தும் வருகின்றன.அவ்வாறு பிரச்னைகள் தீர்ந்தவைகளைப் பற்றி தினமும் ஏராளமானவர்கள் எமக்கு போனில் தெரிவித்து நன்றி கூறியும் வருகின்றனர்.

இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்னவெனில்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ராகு கால நேரத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வதில்லை;
அதற்கு முதல் காரணம்: இது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது;
இரண்டாவது காரணம்: பெரும்பாலும் மதிய நேரத்தில் ராகு காலம் வருவது;
 மூன்றாவது காரணம்: தேய்பிறை அஷ்டமியானது ஒரு முழு நாளில் வருவது குறைவு;ஒருநாள் மதியம் அல்லது மாலையில் துவங்கி மறுநாள் மதியம் அல்லது மாலை வரை அமைகிறது.இதனால்,பல ஆலயங்களில் முதல் நாளே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்து வருகின்றனர்.

வளர்பிறை அஷ்டமியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து ஆறே ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கு மட்டும் பைரவ வழிபாடு செய்தால் போதுமானது.நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாகத் தீர்ந்துவிடும்.

மேலும் வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவ வழிபாடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை;வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கும் ஒரு நாளில் எந்த நேரத்திலும் பைரவ வழிபாடு செய்யலாம்.

பைரவ வழிபாடு செய்வதற்கு உரிய பொருட்கள் பட்டியல் வருமாறு:
அத்தர்
புனுகு
ஜவ்வாது
சந்தனாதித்தைலம்
செவ்வரளிமாலை
பால்
அரகஜா
இவைகளைக்கொண்டு பைரவ வழிபாடு செய்ய வேண்டும்.

அபிஷேகம் செய்யும் போது நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கேள்வி:மிக்க நன்றிகள் ஐயா,மிகவும் மகிழ்ச்சிகள் ஐயா! ஒரு சிறு சந்தேகம். . .கேட்கலாமா ஐயா?

பதில்:கேளுங்கள்

கேள்வி: வளர்பிறை அஷ்டமி நாளில் சொர்ண பைரவரைத்தான் வழிபட வேண்டுமா? இல்லை காலபைரவரை வழிபடலாமா?

பதில்:தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கும் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் எந்த ஒரு பைரவப்பெருமானையும் வழிபடலாம்;ஆனால்,நீங்கள் முதல் வளர்பிறை அஷ்டமி நாளன்று எந்த பைரவப் பெருமானை வழிபடுவீர்களோ,அவரையே ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களும் வழிபட வேண்டும்.மாற்றக்கூடாது.

கேள்வி:அப்போ காலபைரவரை முதல் வளர்பிறை அஷ்டமியன்று வழிபாடு செய்தால் ஆறு வளர்பிறைக்கும் அவரையே தான் வழிபாடு செய்ய வேண்டுமா?

பதில்:ஆமாம்

கேள்வி: ஐயா(தலையைச் சொறிந்தவாறு) என் தம்பி காரைக்குடியில் வசித்து வருகிறான்.அவன் சொர்ண பைரவர் மீது ரொம்ப பாசத்தோடு இருக்கான்;அவனை இலுப்பைக்குடிக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிக்குச் சென்று வழிபாடு செய்யச் சொல்லலாமா?

பதில்:அதுதான் சரி

கேள்வி: ஐயா! எங்க அண்ணனுக்கு துலாம் ராசி,விசாகம் நட்சத்திரம்.ஏழரைச்சனியால் ரொம்ப கஷ்டப்படுகிறார்.அவருக்கு ஏதாவது பைரவ பரிகாரம் சொன்னால் நல்லாயிருக்கும். . .

பதில்:அவரை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு,ஆறு வளர்பிறை அஷ்டமிக்கு அவர் ஊரில் இருக்கும் பைரவப் பெருமானை வழிபாடு செய்யச் சொல்லுங்கள்;அவரது கஷ்டங்கள் பறந்தோடிவிடும்.

கேள்வி:ஐயா,கடைசியாக ஒரு சந்தேகம்?

பதில்:(புன்னகைத்தவாறு) கேளுங்க

கேள்வி:ஒருவரே வளர்பிறை அஷ்டமிக்கும்,தேய்பிறை அஷ்டமிக்கும் பைரவ வழிபாடு செய்யலாமா?

பதில்:வளர்பிறை அஷ்டமி வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது.உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் வளர்பிறை அஷ்டமி வழிபாட்டிலேயே கிடைத்துவிடும்.வரும்.8.3.14 சனிக்கிழமை காலை 9.44 முதல் 9.3.14 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கிறது.

கேள்வி:ரொம்ப நன்றிங்கய்யா,எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க

Monday, February 17, 2014

பைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை!!!



எந்த வழிபாடு செய்தாலும்,வழிபாட்டின் முக்கிய அம்சமே நமது மனதிற்குள் உருவாகும் நம்பிக்கையே! ஒரு பழமையான சிவாலயம் சென்று வழிபடும் போது நமது நம்பிக்கையே அங்கே இருக்கும் தெய்வ சக்திகளால் கவனிக்கப்படுகிறது.நம்பிக்கையில்லாமல் கடனே என்று வழிபட்டால் நமது கோரிக்கைகள் இறை சக்தியால் கவனிக்கப்படுவதில்லை;

ஒரு சாலையோர விநாயகர் கோவிலுக்கு தினமும் மனப்பூர்வமான நம்பிக்கையோடு சென்று நமது கோரிக்கையை வைத்தால் நிச்சயம் நமது நம்பிக்கை நிஜமாகும்.

நமது நம்பிக்கையை எப்படி மனதிற்குள் உருவகப்படுத்த வேண்டும் தெரியுமா?

எது நம்முடைய லட்சியமோ அதை அடைந்துவிட்டதாக நாம் திரைப்படம் போல கற்பனை செய்ய வேண்டும்.அவ்வாறு ஒவ்வொரு நாளும் நினைக்கும் போது அந்த லட்சியம் நிறைவேறியதற்காக நாம் இப்போது வழிபடும் தெய்வத்திற்கு நன்றியும் கூறும் விதமாக சிந்திக்க வேண்டும்.இதைத்தான் மனோதத்துவ டெக்னிக்குகளில் Creative Visuvalization என்று கூறுகிறார்கள்.இப்படி தினமும் அந்த சாலையோர விநாயகர் கோவிலில் வழிபடும் போது(சாமி கும்பிடும்போது) திரைப்படம் போல நினைக்கும் போது ஒரு சில நாட்களில் நமது ஆழ்மனம் விழிக்கும்;அப்படி விழிக்கும் போது நமது ‘லட்சியம் நிறைவேறும் விதமான நமது கற்பனைத் திரைப்படம்’ நமது ஆழ்மனதிற்குள் பதிந்துவிடும்;அப்படி ஒரே ஒருமுறை பதிந்துவிட்டாலே அடுத்த சில நாட்கள்/வாரங்களில் நமது லட்சியம் நிஜமாகத் துவங்கும்.

எப்போதும் ஒரு தெய்வத்தை தினமும் வழிபாடு செய்யும் போது ஒரே ஒரு கோரிக்கையோடு மட்டுமே வழிபட வேண்டும்.அது நிறைவேறிய பின்னரே அடுத்த கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்.


ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது இப்படி கற்பனை செய்ய வேண்டியதில்லை;ஏனெனில்,தொடர்ந்து நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றிடக் காரணமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.மேலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானைத்தவிர,வேறு எந்த தெய்வத்தை வழிபடச் சென்றாலும் நமது ஒரே ஒரு கோரிக்கையை திரும்பத் திரும்ப நினைத்து வேண்டிக்கொண்டே இருந்தால் தான் அது நிறைவேறும்.

ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது எந்த கோரிக்கையும் இல்லாமல் திறந்த மனதுடன் போனாலே போதும்.இதுவும் சரணாகதி தத்துவத்தின் ஒரு அங்கமே!

நம்மை படைத்தவருக்குத் தெரியாதா? எதை நமக்கு முதலில் தர வேண்டும்; எதை நமக்கு இறுதியில் தர வேண்டும் என்று!!

நம்மைப் படைத்தவர் பிரம்மாதான்.அதே பிரம்மாதான் நாம் இப்பிறவியில் இந்த ஆத்மா ஸ்ரீகாலபைரவப் பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து தனது காலத்தையே மாற்றிடப் பிறந்திருக்கிறது என்றும் நமது தலையெழுத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்.

Wednesday, February 12, 2014

பைரவ கணமாக ஒரு சுலபமான வழிபாட்டுமுறை



இந்த பிறவியிலேயே பைரவப் பெருமானின் அருளைப் பெற நீங்கள் விரும்பினால்  ஒரே ஒரு வழிமுறையைப் பின்பற்றினாலே போதுமானது;அது:-

 அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட்டுவிட வேண்டும்;மது அருந்துவதையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்;தமிழ்ப்பண்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்ற வேண்டும்.இந்த தினசரிக் கொள்கைகளோடு மாதம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நோட்டில் எழுதி வர வேண்டும்.இன்று முதல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எழுதி வந்தாலே போதுமானது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை பின்வரும் விதமாகவே எழுத வேண்டும்.
ஓம்(உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும்
ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறையும்
ஓம் அண்ணாமலையே போற்றி என்று ஒருமுறையும் எழுதி முடிக்க வேண்டும்.இப்படி எழுதுவதை நமது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கலாம்;ஆனால்,வெளிவட்டார நட்புக்களிடம் ஒருபோதும் காட்டக் கூடாது;

தினமும் இந்த 108முறை எழுத ஆரம்பித்தால்,எக்காரணம் கொண்டும் எழுதி முடிக்கும் வரை வேறு வேலையில் கவனம் சிதறக் கூடாது.செல்போன் பேசக் கூடாது.டிவி பார்த்துக் கொண்டே எழுதக் கூடாது;ரேடியோ கேட்டுக்கொண்டே எழுதக் கூடாது.ஒரு நாளில் உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் எழுதலாம்;

18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.அதை விடக் குறைந்தவர்கள் எழுதக் கூடாது.ஒருபோதும் சிகப்பு,கறுப்பு நிறப்பேனாக்களால் எழுதக் கூடாது;நீல நிறப் பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.பூஜை அறையில் அமர்ந்து எழுத வேண்டும்.
அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் தினமும் இந்த 108 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுத சிறந்த நேரம் ஆகும்.

தீட்டு வீடுகளுக்குச் சென்று கலந்து கொண்டால் ஒன்பது நாட்கள் வரை எழுதக் கூடாது.பத்தாவது நாளில் இருந்து எழுதத் துவங்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை எழுதிக்கொண்டே வந்தால்,நமக்கு நமது பிறவி சுபாவத்திற்கேற்றவிதமான ஆன்மீக குரு கிடைப்பார்;(பழமொழி:சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்).அதன் பிறகு,நமது வாழ்க்கையில் துரோகம்,ஏமாற்றம்,பண நெருக்கடி,குடும்பக் குழப்பம் என்று எதுவும் ஏற்படாது;நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகிவிடும்;கர்மவினைகளும் கரையத் துவங்கும்;


ஐந்து ஆண்டுகள் வரை தினமும் எழுதிக்கொண்டே வந்தால்,நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சும உலகத்தோடு தொடர்பு உண்டாகும்; நமது பிறவிகுணத்தில் இருக்கும் தீய குணங்கள் மறைந்துவிடும்;நமது மனநிலை,உடல் நிலை முழுக்க முழுக்க மென்மையும்,ஆன்மீகச் சூழ்நிலைக்கு ஏற்றவிதமாக உருமாறிவிடும்;நிச்சயமாக அட்ட வீரட்டானங்களுக்கு உங்களின் ஆன்மீக குருவோடு பயணிக்கும் சந்தர்ப்பம் அமையும்;அட்டவீரட்டானங்களுக்குப் போய்த் திரும்பியப் பின்னர் என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் இது வரை எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்துள்ளீர்கள்?

எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன தவறுகள் செய்தீர்கள்?

அந்தத் தவறுகளால் இப்பிறவியில் என்னென்ன விதமான கஷ்டங்கள்,அவமானங்கள்,வேதனைகளை அனுபவிக்கிறீர்கள்? 

அனுபவிக்கப் போகிறீர்கள்? என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்?

எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன புண்ணியம் செய்தீர்கள்?

அந்த புண்ணியங்களால் இப்பிறவியில் உங்களுக்கு கிடைத்திருக்கும் சொத்துக்கள்,திறமைகள்,அதிர்ஷடங்கள் என்னென்ன? இனிமேல் என்னென்ன கிடைக்க இருக்கிறது? என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.

எதனால் இந்த அதிசயம் நிகழும் தெரியுமா? நீங்கள் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதுவதன் மூலமாக காலத்தை இயக்கும் கடவுளான காலபைரவப் பெருமானைச் சரணடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

30 ஆண்டுகள் வரை தினமும் 108 முறை எழுதிவிட்டீர்கள் எனில் நிச்சயமாக நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள்இன்னும் ஏராளமான ஆச்சரியங்களை இந்தப் பிறவியிலேயே காண்பீர்கள்;அவைகளை இங்கே பகிரங்கப்படுத்த முடியாது.ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு மனக்குறை என்று எதுவுமே இராது.ஆரம்பிப்போமா?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ