Monday, October 7, 2013

சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர்!!!


சுக்கிர தோஷங்களை முழுமையாக நிவர்த்தி செய்யும் ஸ்தலம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில்!!!
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே வாகன வசதிகள்,புத்தம் புது ஆடை ஆபரணங்கள்,சுகமான திருமண வாழ்க்கை,சரசக்கலை  போன்றவை எந்தக் குறைவின்றியும் அமையும்.ஆனால்,கலியுகமான நாம் வாழும் காலத்தில் அப்படி எல்லோருக்கும் அமைந்திருக்கிறதா?
ஜோதிட விதிகளின் படி ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சமாகக் கூடாது;நீசமாகக்கூடாது;மறையக் கூடாது;சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் போன்ற கிரகங்களோடு சேரக்கூடாது.அசுர குருவாகிய சுக்கிரன்,தேவகுருவாகிய வியாழன் என்ற குருவுடனும் சேராமல் இருக்க வேண்டும்.இன்னும் சில ஜோதிடவிதிகளும் உண்டு.
சுக்கிரன் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் உச்சமாகிறார்;அதே சுக்கிரன் கன்னி ராசியில் அஸ்தத்தில் நீசமாகிறார்.லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுகக் குறைவு இருக்கவே செய்யும்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் இருப்பவர்கள் படித்தபடிப்புக்கு ஏற்றாற்போல  நாகரீகமாக ஆடை அணியமாட்டார்.காதல் அரசியலில் சாணக்கியத்தனத்தோடு இருக்க மாட்டார்.ரொமான்ஸ் கலையில் இவர் எப்போதும் கத்துக்குட்டிதான்.இவரை காதலிக்க விரும்பும் எதிர்பாலினத்தின் ‘சிக்னல்’களை இவரால் புரிந்துகொள்ளவே முடியாது.(ஆனால்,தனது வாழ்க்கைத் துணையை தமது அன்புக்குப் பாத்திரமாக வைத்திருக்க வேண்டுமே?)
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களுக்கான பலன்களும் அடுத்த பிறவியில் தான் அனுபவிப்பார்;இதைப் புரிந்து கொண்டு ஏராளமான புண்ணியக் காரியங்களைச் செய்வோரும் உண்டு.அப்படிச் செய்வதன் மூலமாக அவரது குழந்தைகள் சகல சம்பத்துக்களுடன் வாழ்வார்கள்.அதே சமயம்,ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களையும் இந்த ஜன்மத்திலேயே அனுபவிப்பார்.(பாவக்கிரகங்கள் சேராமலும்,பார்க்காமலும் இருந்தால் முழுமையாக அனுபவிக்கும் யோகங்கள் ஏற்படும்)
நூறு பேர்களின் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் சராசரியாக   ஒன்பது பேர்களுக்கு மட்டுமே சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறது.சுக்கிரன் உடன் பாவக்கிரகங்கள் சேர்வதாலும்,அப்படிச் சேர்ந்து அவைகளின் திசாபுக்தி வருவதாலுமே நாட்டில் காமம் சார்ந்த வக்கிர சம்பவங்கள் நிகழ்கின்றன.அவர்களிலும் பாதிபேர்களுக்கு வேறுவிதமான தோஷங்கள் இருந்து,சுக்கிரனை செயலிழந்து போக வைக்கின்றன.அந்த தோஷங்களை நீக்கியப்பின்னரே,சுகமான வாழ்க்கை அமைகின்றது.நாத்திகம்,கம்யூனிஸம், பத்திரிகைப் பிரச்சாரங்களால் இந்து தர்மம் பற்றிய பெருமைகள் மறைக்கப்பட்டுவிட்டன;அல்லது அழிக்கப்பட்டுவிட்டன;எனவே, இவைகளை நம்புவோர் எண்ணிக்கை  நமது தமிழ்நாட்டில் மிகக் குறைவு.
சுக்கிரனது பலத்தை தேவையான அளவுக்கு அதிகரிக்க பல விதமான கோவில்கள் இருக்கின்றன.பல ஜோதிட வார இதழ்களிலும்,புத்தகங்களிலும் இது தொடர்பாக விளக்கங்களும்,புராணரீதியாக காரணங்களும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அந்தக் கோவில்களின் சக்தியை விடவும்,முழுமையான சக்தி அட்டவீரட்ட ஸ்தலமாகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நிரம்பியிருக்கிறது.ஏனெனில்,சுக்கிரபகவான் புனர் ஜன்மம் எடுத்தது இந்த திருக்கோவிலூரில்தான்! தாம் மறுவாழ்வு பெற்ற இந்த கோவிலில் தம்மை வழிபடுபவர்களுக்கு சகலவிதமான சுக்கிரதோஷங்களையும் நீக்கி,சுகம் நிறைந்த வாழ்க்கையை அளித்துவருகிறார்.
ஆட்டோ ஓட்டுபவர்கள்,வாடகை கார்கள்/வேன்கள் வைத்து தொழில் செய்பவர்கள்,உணவகம் நடத்துபவர்கள்,இனிப்புப் பதார்த்தங்கள் தயாரிப்போர்,இனிப்புக்கடைகள் வைத்திருப்போர்,பெண்கள் கல்வியகங்கள் வைத்திருப்போர்,கரும்புத்  தோட்டங்கள் வைத்திருப்போர்,சர்க்கரை ஆலை நடத்துவோர்,ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் விளைவிப்போர்,ஃபேன்ஸி ஸ்டோர்கள் நடத்துபவர்கள்,அழகு நிலையம் நடத்துபவர்கள்,அழகுக்கலைப் பயிற்சி மையங்கள் நடத்துபவர்களுக்காக பின்வரும் வழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை மட்டும் பின்பற்றுவதன் மூலமாக மேற்கூறிய தொழில் அல்லது அது தொடர்பான தொழில்களில் அனைத்து தடைகளும் நீங்கி,மகத்தான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பது சர்வநிச்சயம்.இந்த ஆறு வெள்ளிக்கிழமைகளில் கடைசி அல்லது முதல் வெள்ளிக்கிழமை மட்டும் விழுப்புரம் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பின்வரும் பொருட்களால் அங்கே இருக்கும் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்படி அபிஷேகம் செய்தபின்னர்,அந்த அபிஷேகத் தண்ணீர்க் கலவையை நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.அதில்,நாம் குளிக்க வேண்டும். ஆறு வெள்ளிக்கிழமைகளுக்கு மேல் செய்யக் கூடாது.
அதே சமயம்,கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கே வழிபாடு செய்யும்போது,மூலவராகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கும் அபிஷேகம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.(வசதியுள்ளவர்கள் அதே நாளில் இங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கும் தனியாக ஒரு அபிஷேகம் செய்யலாம்.இந்த கால பைரவரையும்,இந்த வீரட்டேஸ்வரரையும் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி ராஜராஜசோழ மன்னன் தொடர்ந்து வழிபட்டார்;அப்படி வழிபட்டதால்,சோழ சம்ராஜ்ஜியம் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்தது;எவ்வ்வ்வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாகத் தெரியுமா? வடக்கே சைபீரியாதான் எல்லை; தெற்கே அண்டார்டிக்கா எல்லை;மேற்கே ஆப்ரிக்கக்கண்டமும்,கிழக்கே நியூஸிலாந்தும் எல்லையாக மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்தது;இன்றும்,ஆஸ்திரேலியாவின் மேற்கு வனப்பகுதியில் தமிழ்ப்பேசும் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் ஆஸ்திரேலியாவை ஆள்வதற்காக நமது தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப் பட்டவர்கள்!!!)
மல்லிகைப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை மற்றும் போதுமான மல்லிகை உதிரிப்பூக்கள்,
விபூதி,மாப்பொடி,பால்,பன்னீர் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் சுக்கிர பகவானுக்கு நாம் வாங்கி வந்த மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலையையும்,வெள்ளைப்பட்டுத் துண்டினையும் சார்த்த வேண்டும்.யாருக்கு சுக்கிர தோஷம் நீங்க வேண்டுமோ,அவர்கள் பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி, மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.இதன் மூலமாக சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் தீரும்.
சுக்கிரன் கன்னிராசியில் இருக்கப்பிறந்து,சுக்கிர திசை நடப்பில் இருப்பவர்களும்,சுக்கிர திசை இனிமேல் வர இருப்பவர்களும் இதே வழிபாட்டுமுறையை ஆறு பவுர்ணமி நாட்களுக்கு பின்பற்றிட சுக்கிரனது நீசத்தன்மை முழுமையாக நீங்கிவிடும்.
(படத்தில் இருப்பது திருக்கோவிலூர் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்!!! அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் இந்த திருக்கோவிலூர்!!!)
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment